Google News
நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த மாநிலமாக தமிழகம் அறியப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீரை வழங்குகின்றன. நீர்நிலைகளை பாதுகாக்க வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் நிலையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே உள்ளது) விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
எனவே, பொது மக்களுக்கு பின்வரும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
- களிமண் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) ஆகியவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரீன்) கலக்காமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டவை நீர்நிலைகளில் பாதுகாப்பாக கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
- உலர் மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை சிலைகளின் ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளக்க மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி இல்லை. நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் அல்லது சிலைகள் / பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
- சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயங்கள் / எண்ணெய் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தக்கூடாது. சிலைகளுக்கு எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தக் கூடாது. மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கும் / நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- சிலைகளை அழகுபடுத்த பெயின்ட் மற்றும் இதர நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தாமல், இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுடன் கொண்டாட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post